Monday, 26 September 2016

மக்கள் கலைஞனுக்கு மணி விழா

மக்கள் கலைஞனுக்கு மணிவிழா!

"இன்னவை தாம் கவி எழுத
ஏற்ற பொருள் என்று பிறர்
சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர்.." என மஹாகவி குறிப்பிட்டதைப்போல இலங்கையின் கல்வித்துறையில் மிக உயர்ந்த பதவிகளை அலங்கரித்தபோதும் ஒரு மக்கள் கலைஞனாகவே எப்போதும் தன்னை தகவமைத்துள்ளார். கொட்டியாரம் தந்த நாட்டாரியல் கலைஞன், நாடகன், கவிஞன், ஆய்வாளன், தமிழ்த்தேசியவாதி, இன்னும் பேராசிரியர் என பல பாத்திரங்களை அலங்கரித்த திரு. பால சுகுமார் அவர்களை என் தகுதி மீறிய மொழியால் நீடு வாழ்ந்து தமிழ் செய்யுமாறு வாழ்த்துகிறேன்.

கிழக்கிலங்கை பல்கலைக்கழத்தின் கலைப்பீடாதிபதி, பதில் துணைவேந்தர், "அனாமிகா" பதிப்பகத்தின் ஊடான பதிப்பாசிரியர் என இன்று பல முகவரிகளை இவர்கொண்டிருந்தாலும் இத்தகைய ஆற்றல்கள் பதியமிடப்பட்டது இவரது பதின்ம வயது காலமான 1970களே.  அந்நேரம் சேனையூர் மகா வித்தியாலயத்தில் இவருக்கு தமிழாசிரியராக விளங்கிய மூத்த தமிழ்த்தேசியவாதி பேராசான் த.ஜெயவீரசிங்கம் அவர்களிடம் பின்னாளில் நானும் படிக்கின்ற பேறுபெற்றேன். எனது குருவின் கற்பித்தல் வரலாற்றில் முதல் மாணவராகவும் முதன்மையானவராகவும் திரு சுகுமார் அவர்கள் அமைய நான் ஏறத்தாள அவரின் ஆசிரியப் பணியின் நிறைவுக் காலத்து மாணவனாக வந்தேன். என் குரு சேனையூரை விட்டு யாழ்ப்பாணம் வந்து மூன்று தசாப்தங்களை தாண்டிய போதும் எப்போதும் அவர் அன்றைய காலத்தை உற்சாகமாக எங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்த ஞாபக குவியலில் இருந்து ஒரு பகுதினையே இங்கு சுருக்கமாக விபரிக்கிறேன்.

1974இல் சேனையூர் மகா வித்தியாலயத்தில் அப் பிரதேச ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கும் நோக்குடன் முதன்முதலாக உயர்தர கலைப் பிரிவு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் அப்போது  மூதூரின் அரசியல் தலைவராக இருந்த அமைச்சர் திரு அப்துல் மஜித் அவர்கள் அதற்கு தொடர்ந்தும் அனுமதி வழங்க மறுத்தார். 1976 இல் அந்த மாணவர்கள் பரீட்சையை நெருங்கிய பொழுதே உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்தது. போதிய வளங்களற்ற பள்ளியில் புதிதாக ஆரம்பித்த உயர்தர வகுப்பில் தம் பிள்ளைகள் படித்தால் அது அவர்களின் கல்வியை பாதித்துவிடும் என சில ஊர் பிரமுகர்கள் ஐயத்தை பரப்பினர். இடர்களும் தடைகளும் சூழ்ந்த போதும் அவ் முதல் வகுப்பில் கற்ற 4பேரும் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகினர். பின்னாளில் அவர்கள் கிழக்கிலங்கையின் கல்வித்துறையில் முதன்மையானவர்களாக விளங்கினர். இவர்களுள் ஒருவராகவும் முக்கியமானவராகவும் திரு சுகுமார் அவர்கள் விளங்குகிறார்.

சேனையூர் பள்ளிக் காலமே இவரின் பன்முக ஆளுமையை அடையாளம் கண்டு தட்டிக்கொடுத்தது. இயல்பில் மிகுந்த சுறுசுறுப்பும் கவிஞர்களுக்கே உரித்தான வானத்தை அளாவும் கட்டற்ற மனமும் இவருக்கு வசப்பட்டிருந்தது. இவரது பேரன் திரு காளியப்பு அவர்கள் ஊரறிந்த பூசாரியாகவும் பரியாரியாராகவும் இருந்தார். இவரது பெரியப்பா பல்கலை ஆற்றல்மிக்க வித்தகர் விஜயசிங்கம். சிறிய தகப்பன் கலாபூசணம் திரு வீரசிங்கம் அவர்கள் பேர்பெற்ற வில்லிசைக் கலைஞராக இருந்தார். பாரம்பரியமான புலவர் பரம்பரை, வைத்தியம், பூசாரிகள் என கலையார்வம்மிக்க குடும்ப பின்னணியில் இருந்தும் இவரது ஆளுமை இயல்பில் முகிழ்ந்தது.

உயர்தர வகுப்பில் பாடப்புத்தகங்களை கடந்த தேடல்களை பேராசான் திரு ஜெயவீரசிங்கம் சேர் உட்பட பலர் வழிப்படுத்தினர். சேனையூர் மகா வித்தியாலயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வாணி விழா கலைத் தாயின் பெருவிழாவாகவே அமைந்திருந்தது. ஈழத்தின் மூத்த படைப்பாளி திரு வ. அ. இராசரத்தினம் அவர்கள் இவர்களின் ஆசிரியராக பணியாற்றினார். அவரின் எழுத்துருவில் பல நாடகங்கள் மேடையேறின. எனது குருவும் சில நாடகங்களை அரங்கேற்றினார். இவை யாவற்றிலும் திரு சுகுமார் அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்தார். அயற்கிராமங்கள் பலவற்றில் இருந்தும் மக்கள் இவ் விழாவினைக் காண வருமளவிற்கு இவர்களின் கலை நிகழ்வுகள் திறம்பட இடம்பெற்றன.

திராவிட இயக்கங்களின் பேச்சாளர்கள் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த அக்காலத்தில் இவர்களும் பெரும் பேச்சாளர்களாக உருவாக வேண்டும் என எண்ணிய பேராசான் திரு ஜெயவீரசிங்கம் அவர்கள் ஒரு விநோதமான உத்தியை கையாண்டார். வாணி விழாவிற்கு அடுத்த நாளை "சாணி விழா" என இவர்கள் நகைச்சுவையாக கொண்டாடினர். முதல்நாள் பொங்கலுக்காக பயன்படுத்திய தேங்காய் சிரட்டைகளை ஒலிவாங்கி (மைக்) போல மேடையை சுற்றி தொங்கவிட்டனர். பலர் பல்வேறு தலைப்புக்களில் பல்லாயிரம் மக்களின் முன்னால் நிகழும் அரசியல் பொதுக்கூட்டங்கள் போல பாவனை செய்து பலர் உரை நிகழ்த்தினர். இதில் திரு பால சுகுமார் அவர்கள் தலையாய பேச்சாளராக  எப்போதும் முன்னிலை வகித்தார்.

இவரது பள்ளிக் காலத்தில் இடம்பெற்ற ஒரு சுவாரசியமான தருணத்தை எனது குரு என்னிடம் பகிர்ந்துகொண்டார். 1973 வாக்கில் சிறப்பாக நடனம் பயின்ற ஒரு மாணவியின் நடன நிகழ்வை எல்லோரும் சிலாகித்து கொண்டாடினர். மாணவனின் ஆற்றலை உள்ளூர அறிந்த என் குரு எந்தவித நடன பயிற்சியுமற்ற இவரை அம் மாணவிபோல் நடன நிகழ்வை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கால்களில் சதங்கைகள் ஒலிக்க பாவத்தில் பெண்களை விஞ்ச இவர் ஆடிய நடனத்தை பார்த்து பாடசாலையே எழுந்து நின்று ஆர்ப்பரித்தது. இவரை ஆடுமாறு கேட்ட பேராசான் மேடையில் வைத்து கட்டியணைத்து நீ பிறவிக் கலைஞன் என உச்சிமோந்தார். ஆசிரியர்களது ஆசியும் அன்பும் அங்கீகாரமுமே இவரை ஒரு பேராசிரியராக உயர்த்தியது என்பேன்.

ஆய்வுப் புலத்திலும் திரு சுகுமார் அவர்கள் உயர்தர வகுப்பு காலத்தில் இருந்தே ஆர்வமும் ஆற்றலும் பெற்றிருந்தார். பாடசாலையில் இடம்பெற்ற இலக்கிய மன்றத்தில் சம கால படைப்புக்கள் தொடர்பான விமர்சன உரைகளை நிகழ்த்தினார். குறிப்பாக ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர் திரு செ. கணேசலிங்கம் அவர்கள் அந்நேரம் "குமரன்" சஞ்சிகையினை வெளியிட்டுக்கொண்டிருந்தார். இடதுசாரி- கம்யூனிஸ்ட்ட முற்போக்கு படைப்புக்களை அது தாங்கிவந்தது. அச் சஞ்சிகையில் பிரசுரமான கவிஞர் புதுவை இரத்தினதுரை போன்ற புகழ்பெற்ற படைப்பாளர்களின் எழுத்துக்களை இவர் ஆர்வத்தோடு ஆய்வுசெய்தார்.

திரு சுகுமார் அவர்களின் கல்விக்கால தடங்கள் யாவும் அவரையொரு மக்கள் கலைஞராகவே பதிவுசெய்கின்றன. வெறுமனே வகுப்பறை பாடப்புத்தகங்களுக்குள்ளோ அல்லது விரிவுரையாளனாக பாடக் குறிப்பும் பரீட்சையும் என்றோ இவர் தன்னை குறுக்கிக்கொள்ளவில்லை. பள்ளிக்காலம் முதல் இன்றுவரை துடிப்புமிக்க அரசியல் சமூக செயற்பாட்டாளனாகவே பங்கெடுத்துவருகிறார். இதனை திரு புஸ்பராஜன் அவர்கள் எழுதிய " ஈழப் போராட்டத்தில் எனது சாட்சிகள்" எனும் வரலாற்று நூல் தொடக்கம் பல தமிழ்த்தேசிய போராளிகளின் குறிப்புக்களில் ஆவணப்படுத்தியுள்ளன.

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் தியாகி பொன் சிவகுமார் அவர்கள் 1974இல் நஞ்சருந்தி வீரமரணமடைந்தார். அக் காலத்தையொட்டி தமிழ் பிரதேசங்களெங்கும் இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசியம் வேண்டிய புரட்சி கிளர்ந்தெழுந்தது. இலங்கை அரசியலில் இருந்த இடதுசாரி தலைவர்களின் மீதும் தமிழ் பாராளுமன்ற அரசியல்வாதிகள் மீதும் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை மெல்ல மெல்ல சரிவு கண்டது. ஆயுதம் ஏந்திய புரட்சிகரமான பாதையே தம் விடியலுக்கான வழி என மக்கள் எண்ணத்தொடங்கினர். பல படித்த இளைஞர்கள் தாயக விடுதலைக்காக இயக்கங்களில் இணைந்து அரசியலில் பங்கெடுத்தனர். ஆரம்பம் முதலே ஈழவிடுதலை போராட்டத்தில் முதன்மை பங்கெடுத்துவரும் தென் தமிழீழத்தின் பல பகுதிகளில் பல தலைவர்களோடு இணைந்து களப் பணியாற்றினார். அந்நேரம் பல தமிழ்ப் போராளிகள் தலை மறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் இயக்க வேறுபாடின்றி மூதூர் மண் உண்ண உணவும் தங்க வீடும் கொடுத்து புரட்சியின் தாய் மடியாக இருந்தது. பேராசான் திரு ஜெயவீரசிங்கம் அவர்கள் ஆரம்பம் முதலே விடுதலை போராளிகளோடு நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தார். அவரிடம் பல போராளிகள் வந்து தங்கிப்போயினர். அவரின் முதன்மை மாணவனான திரு சுகுமாரிடமும் விடுதலை உணர்வு மிகுந்திருந்தது. இவரும் எல்லா தமிழ் விடுதலை போராளிகளுடனும் தோழமையாக பழகி தீவிர கள செயற்பாட்டாளராக இயங்கினார். தோழர்கள் வரதராஜப்பெருமாள், சுந்தர், இராசகிளி, முத்துக்குமாரசாமி, இரத்தினசபாபதி, பாலகுமார், பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சந்ததியார், ஜான் மாஸ்ரர், சந்தோஷ், சீலன் என பலரை குறிப்பிடலாம். இலங்கை அரசுக்கு எதிரான பல இடர்கள் மிகுந்த ஆரம்பகால விடுதலை போராட்ட அரசியலில் இவரது பங்கும் கவனிக்கத்தக்கது.

மூதூர் பிரதேச தமிழர்களின் கல்வி மறுமலர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய சேனையூர் மகா வித்தியாலயத்தின் முதல் பட்டதாரியாக இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்தார். பேராசிரியர்களான வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, இந்திரபாலா, மௌனகுரு போன்ற இலங்கையின் முதன்மை புலமையாளர்களிடம் கற்று அறிவின் ஆழம் கண்டார். இவர் கிழக்கிலங்கை பல்பலைக்கழத்தின் கலைப்பீடாதிபதியாக பதவிவகித்த காலம் அதன் பொற்காலமென பலராலும் பாராட்டப்படுகிறது. பல்கலைக்கழத்தினை சமூகத்தோடு இணைத்து பயணித்தார். பேராசிரியர் மௌனகுரு அவர்களுடன் இணைந்து நாடக அரங்கியல் துறையினை வளர்த்தெடுத்தார். மக்கள் கல்வியாளனான இவர் ஈழப் போராட்டத்தின் ஊழிக் காலத்தில் நாட்டைத் துறந்து வெளிநாட்டில் வாழ நிர்பந்திக்கப்பட்டார். புலம்பெயர் அலைந்துழலும் வாழ்வின் நெருக்கடிகளுக்குள்ளும் கிழக்கிலங்கையின் மேம்பாடு குறித்தும் தமிழ் ஆய்வு முயற்சிகளிலும் நூல் பதிப்பு செயற்பாடுகளிலுமே எப்போதும் ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். இந்த மண்ணின் புலமையாளனை வாழ்த்துவதில் நான் எப்போதும் பெருமைகொள்கிறேன்.


வி. பாரதிதாஸ்   லண்டன்
முன்னை நாள் விரிவுரையாளர்,
பொருளியல் துறை,
யாழ் பல்கலைக்கழகம். 

No comments:

Post a Comment