Monday, 26 September 2016

நினைவுகளினூடாக பாலசுகுமார்

நினைவுகளின் ஊடாக பாலசுகுமார்
     நான் 1994ல் கொழும்புவில் இலங்கை கலாச்சாரத் துறையின் சார்பில் நடந்த நாடகக் கருத்தரங்கில் தான் பாலசுகுமாரை முதலில் சந்தித்தேன்.அந்த கருத்தரங்குக்கு தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் ராமானுஜம்,ந.முத்துசாமி,பேராசிரியர் ராஜூ,பிரசன்னா ராமசாமி மற்றும் நான் ஆகிய ஐவரும் அழைக்கப்பட்டிருந்தோம்.அப்போதுதான் பேராசிரியர் சிவத்தம்பி,மெளனகுரு,ஜெய்சங்கர்,பாலசுகுமார் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.அந்த கருத்தரங்கம் இலங்கைக்கும்,தமிழ்நாட்டுக்கும் இடையே இருந்துவந்த ஆழ்ந்த கலாச்சார உறவின் இன்னொரு வெளிப்பாடாக இருந்தது மட்டுமல்லாமல் படைப்பாளிகள் இடையே உறவுகள் வலுப்படு வதற்கான தருணமாகவும் இருந்தது. எங்களுடைய மொழி வரலாற்றின் உத்வேகங்கள்தான் அவர்களுக்கும் உத்வேகம் என்பதை அறிந்தபோது ஒரு நெருக்கத்தை உணர்ந்தோம்.நாடகக் கருத்தரங்குக்குப் பிறகு எங்களுடைய கருத்துக்களையும்,செயல் பாடுகளையும் மேலும் பகிர்ந்துகொள்வதற்கான பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு கலாச்சாரத்தளத்தில் எங்களுடைய இலக்குகள் ஒன்று பட்டிருக்கும் உணர்வே ஏற்பட்டது.ஏற்கனவே இன ஒடுக்குமுறைக்கு உள்ளான இலங்கைத்தமிழர் வாழ்வியலுடன் உளப்பூர்வ இணைப்பை வெளிப்படுத்தியவர்கள்தானே நாம்.
     இதன்பின்னர் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு பாலசுகுமார் மனைவியுடன் சென்னை வந்தபோது என் வீட்டில்தான் தங்கினார். எங்கள் இல்லம் மட்டுமல்ல.தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் நண்பர்களுடன் ஒரு அந்நியோன்மையான உறவையே அவர்கள் உணர்ந்தார்கள்.நீண்டகால வரலாற்றுத்தொடர்பின் அண்மை அது. 1950களில் மதுரையில் ஆதிக்கம் செலுத்திய நாடகக் கலைஞர் மதுரகவி பாஸ்கரதாஸ் தான் மதுரையில் முதல்நாள் போட்ட நாடகத்தை அடுத்த நாள் மன்னாரிலும்,அதற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணத்திலும் அரங்கேற்றியதாக தன்னுடைய டைரியில் குறிப்பிடுகிறார்.மேலும் மரங்கள் சூழ்ந்த யாழ்ப்பாண தெருக்களில் நடக்கும்போது தமிழ்நாட்டில் இருப்பதுபோன்ற உணர்வு தான் ஏற்பட்டதாக எழுதியிருக்கிறார்.50 ஆண்டுகளுக்கு முன்பு வரை அத்தகைய அண்மைதான் நம்மிடையே இருந்தது.
      பின்னர் முதுகலை நாடகம் பயில பாண்டி பல்கலை நாடகத்துறையில் அவர் சேர்ந்தபோதுநாடகம் சார்ந்து அவருடன் பல தொடர்புகள் ஏற்பட்டன.அவர் அந்த சூழலில் மிகவும் லயித்து சிறப்பான மாணவராக வெளிப்பட்டார்.தமிழ்நாட்டில் பல படைப்பாளிகளுடனும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.பேராசிரியர் ராமானுஜம் தன்னுடைய `செம்பவளக் காளி` நாடகத்தில் நடிக்க அவரையே தேர்வு செய்தார்.தேவதாசி மரபின் நடன பின்புலத்தில் பயணம் செய்யும் அந்த நாடகத்தில் பாலசுகுமார் ஒரு சிறப்பான படிமத்தை வெளிப்படுத்தினார்.தமிழ் நவீன நாடக வரலாற்றில் மிகவும் குறிப்பிடவேண்டிய நிகழ்வு அது.
      கிழக்கு பல்கலைக்கழகத்தில் அவர் நாடகத்துறை பொறுப்பேற்ற பிறகு இந்த தமிழ்நாட்டு அனுபவங்கள் அவருடைய நாடக செயல்பாட்டில் மேலும் மெருகேற்றியதை பார்க்க முடிந்தது.பின்னர் சுனாமியால் மகளை இழந்த துயரமும்,லண்டனுக்கு இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டு தொடர்புகள் அவருக்கு ஏதோவிதத்தில் ஆறுதலாக இருந்து அவருடைய படைப்பு மனம் மேலும் தீவிரப்பட்டதையே பார்க்க முடிந்தது.கலைஞனின் துயரம் தானே என்றும் படைப்பு செயல்பாட்டுக்கான உந்துசக்தி?
                                                                                                    வெளி ரங்கராஜன்

No comments:

Post a Comment