Wednesday, 14 September 2016

நோர்வேயில் இன்னியம் தந்த பேராசிரியர் பாலசுகுமார்

நோர்வேயில் இன்னியம்.
முற்காலத்தில் மக்கள் நாடகங்களை இசையோடு பாடி, ஆடி நடித்தனர். அவற்றைக் கூத்து என்பர். இலங்கையில் மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், மலையகம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் கூத்துகள் முக்கியமானவை. இன்னியம் என்றால் பல இசைக் கருவிகளைக் கூட்டாக இசைத்தல் என்று பொருள்படும். இன்னியத்துடன் ஆடலும் கொண்டு தமிழரின் பாரம்பரிய மரபுரீதியாகப் பேணப்படும் கலையாக இன்று இன்னியம் விளங்குகின்றது.
நோர்வேஜிய சமூகத்துடனான இணைவாக்கம் இன்றியமையாததாக இருந்ததாலும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தீவிர முயற்சியால் 10.04.1996 இல் தமிழர் வள ஆலோசனை மையம் பதிவு செய்யப்பட்டது. திரு யோகராஜா பாலசிங்கம் அவர்கள் தமிழர் வள ஆலோசனை மையத்தின் இணைப்பாளராக இருந்த காலத்தில், கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் கலைப்பீடாதிபதி பாலசிங்கம் பாலசுகுமார் அவர்களை இலண்டனிலிருந்து வரவழைத்து, ஒஸ்லோ வாழ் தமிழ்க் கலை ஆர்வலர்களின் மாணவர்களுக்கு இன்னியம் அறிமுகமானது.
2009 ஆம் ஆண்டு பொங்கல் விழாவின்போது மரபுரீதியாகப் பேணப்படும் தமிழ் அடையாளமான இன்னியத்தினை அரங்கம் காண, பலர் காத்திருந்தனர். 18.01.2009 அன்று தமிழர்களின் இசைக்கருவிகளான பறை, உடுக்கு, மத்தளம், சல்லரி, றபான், சங்கு, தப்பட்டை, எக்காளம் உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் ஆடல் பாடல்களும் இணைந்து இன்னியம் தமிழர் வள ஆலோசனை மைய கட்டடத்தில் பல சவால்களுக்கு மத்தியில் நடைபெற்றது. ஏறத்தாழ 50 மாணவர்கள் இன்னியத்தில் பங்கேற்றனர். இதில், எதிர்பாராதவிதமாகத் தமிழர் பகுதியில் நடைபெற்ற இன அழிப்பின் காரணமாகப் பங்கு கொண்டவர்களும் நடத்தியவர்களுமே கலந்துகொண்டனர். அத்துடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
2013 இல் திரு உதயகுமார் ஆறுமுகம் அவர்கள் தமிழர் வள ஆலோசனை மையத்தின் இணைப்பாளராக இருந்த காலத்தில், முன்னாள் கலைப்பீடாதிபதி பாலசிங்கம் பாலசுகுமார் அவர்களை இலண்டனிலிருந்து வரவழைத்து ஒஸ்லோவை அண்மித்த கலைப்பாட மாணவர்களை ஒன்றிணைத்து 19.01.2013 அன்று தமிழர் திருநாளில் இன்னியமானது அரங்கேறியது. தமிழர் வள ஆலோசனை மையமும் அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடங்களும் இணைந்து தமிழர் விழா 2013 ஏயடாயடட யுசநயெ என்ற இடத்தில் நடைபெற்றது. இதற்கு வார்சா பல்கலைக்கழக இருக்கை பேராசிரியராக இருந்த அ. ராமசாமி அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம்.
மரபுக் கலை இசையை மாணவர்கள் மிகக்கச்சிதமாக வாசித்தனர். விழாவின் போது இடம்பெற்ற இந்த வாத்தியக் குழுவின் இன்னியமும், ஆட்டமும் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் தமிழர் விழாவில் இன்னியம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இசைப் பகுதியினை திருமதி வாசுகி ரங்கன் அவர்களும், நடனப் பகுதியை திருமதி கங்கா ஜெயராஜ் அவர்களும் வழிநடத்திச் செல்கின்றனர். இவர்கள் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட றொம்மன்வளாக கலை ஆசிரியர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.
தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு இன்னிய இசைக்கருவிகளைச் சிறுவர்களிடத்தே பயிற்றுவித்து எமது பண்பாட்டு விழுமியங்களைக் காக்கவேண்டும். தடைகளைத் தாண்டி நம் அடையாளத்தை நாமே பாதுகாக்க முன்வரவேண்டும். இதற்குக் கலைஆசிரியர்கள், பெற்றோர், பிள்ளைகள் அனைவரும் தமது நிறைவான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொண்டு, இனிவரும் காலங்களில் இன்னும் சிறக்கவேண்டும்.
இன்னியத்தினை நோர்வேயில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் திரு பாலசிங்கம் பாலசுகுமார் அவர்களுடன் தோள்நின்று உருவாக்கியவர்களுக்கும் இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாகக் கொண்டு செல்பவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
மரபுரீதியாகப் பேணப்படும் தமிழரின் இன்னியம் வாழ்க!
பாலசுகுமார் அவர்களின் பணி தொடர்க!

திருமதி அருள்நிதி இராதாகிருஷ்ணன்
முன்னாள் நிர்வாக உறுப்பினர்
தமிழர் வள ஆலோசனை மையம்.

No comments:

Post a Comment